கொவிட் 19 தொற்று நோயால் உலகில் 15 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்து அனாதைகளாகியுள்ளதாக தி லான்செட்டில் (The Lancet) வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலேயே அதிகளவான சிறுவர்கள் அநாதைகளாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் தொற்றுநோயின் முதல் 14 மாதங்களில், தாய் - தந்தை இருவரையோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்துள்ளனர். மேலும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தாத்தா -பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில் அவர்கள் மரணமடைந்ததால் அனாதைகள் ஆனதாக இந்த ஆய்வு முடிவு கூறுகின்றது.
இவ்வாறு பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை இழந்த சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் இவை குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். நோய், உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை மற்றும் இளம் பருவ கர்ப்பம் போன்ற ஆபத்துகள் அதிகரிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கள் ஆய்வு முடிவுகள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இப்போதே அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும், ஆன திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கொவிட் நடவடிக்கை குழுவில் உள்ள முக்கிய உறுப்பினரான டாக்டர் சூசன் ஹில்லிஸ் கூறினார்.
இதேவேளை, பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஆண்களில் இறப்புகள் அதிகமமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் வயதானவர்களில் இறப்பு அதிகம் இருந்தது. கொரோனாவால் தாய்மார்களை இழந்தவர்களை விட தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்